4 நண்பர்களும் அடுத்தடுத்து மரணம்; போதை பழக்கத்தில் இருந்து மீண்ட நாளே எனது பிறந்த நாள்: பெங்காலி நடிகர் உருக்கம்

மும்பை: போதை பழக்கத்தில் இருந்து மீண்ட பெங்காலி நடிகர், தனது 15வது ஆண்டு மறுபிறப்பு தினத்தை கொண்டாடினார். பெங்காலி திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான அனிந்தியா சட்டர்ஜி நேற்று வெளியிட்ட தனது பேஸ்புக்  பதிவில், ‘நாளை (இன்று) எனது பிறந்தநாள். போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுதலையாகி 15வது ஆண்டு தினமாகும். எனது உண்மையான பிறந்த நாள்  டிசம்பர் 29ம் தேதி. ஆனால் போதை பழக்கத்தில் இருந்து வெளியே வந்த நாளை, மிகவும் சந்தோசமான நாளாக கருதுகிறேன்.

கடந்த 2008ம் ஆண்டு பாங்க்ஷால் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பம்  ஏற்பட்டது. அதன்பின் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வெளியே வரவும், மறுவாழ்வுக்காகவும் போராடினேன். அன்றைய தினத்தில் எடுக்கப்பட்ட முடிவால், அன்றைய தினத்தை எனது மறுபிறப்பு  தினமாக கடைபிடிக்கிறேன். கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த நான், தற்போது நலமாக இருப்பதை என்னால் கூட நம்பமுடியவில்லை. நான் போதைக்கு அடிமையானதால், என் தாயின் தங்க நகைகளும், தந்தையின் வங்கிச் சேமிப்யையும் அழித்தேன்.

ஒருகட்டத்தில் 28 வயது வரை கூட வாழ முடியாது  என்பதை உணர்ந்தேன். என்னுடன் இருந்த நான்கு நண்பர்களும் போதை பழக்கத்தால்  ஒவ்வொருவராக இறந்தனர். அவர்களின் இறப்பை பார்த்து பயந்தேன். நான் போதை  பழக்கத்தில் இருந்து விடுபடுவேன் என்று யாரும் நம்பவில்லை. எனவே போதை  பழக்கத்தில் இருந்து வெளியே வருவது எளிதான விஷயம் அல்ல; ஆனால் அதிலிருந்து மீண்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உள்ளேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: