சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு டேக்வாண்டோ பயிற்சியாளர் போக்சோவில் கைது

பெரம்பலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வீரபாண்டியன் நகரை சேர்ந்தவர் தர்மராஜன்(33). பெரம்பலூர் மாவட்ட அரசு விளையாட்டு விடுதியில் உள்ள பள்ளி சிறுமிகளுக்கு தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.  கடந்தாண்டு நவம்பர் 1 முதல் இந்த ஆண்டு நவம்பர் 30 வரை ஓராண்டாக சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்ட நன்னடத்தை அலுவலர் கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 2ம் தேதி குழுவினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் விளையாட்டு விடுதி சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானது உறுதியானது.

இதையடுத்து கடந்த 7ம் தேதி கோபிநாத் அளித்த புகாரின்படி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் தர்மராஜன் மீதும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பதுங்கியிருந்த தர்மராஜனை போலீசார் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை ஜனவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் பெரம்பலூர் கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

Related Stories: