மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற பீடா கடை அதிபர் கைது

*5 கிலோ பறிமுதல்

மதுக்கரை : மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட உ.பியை சேர்ந்த பீடா கடை அதிபரை போலீசார் கைது செய்தனர். கோவையில் மதுக்கரை மார்க்கெட், விறகு கடை பஸ்டாப் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக நேற்று அதிகாலை மதுக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசாருடன் அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் இளவேந்தன், குச்சி பையுடன் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞரை அழைத்து விசாரணை செய்தார். அப்போது அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், இளைஞர் வைத்திருந்த பையை சோதனை செய்தார்.

அப்போது அதில் கஞ்சா சாக்லேட் இருப்பது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை செய்ததில், உத்தரபிரதேச மாநிலம், அசமார்த் மாவட்டத்தை சேர்ந்த அசோக் சங்கர் மகன் வேத் பிரகாஷ் சங்கர் (30) என்பதும், கடந்த 3 மாதத்திற்கு முன்பு மதுக்கரை குவாரி ஆபீஸ் பகுதியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து பீடா கடை நடத்திக்கொண்டு, உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து, கஞ்சாவை வாங்கி வந்து, அதை சாக்லேட்டாக தயாரித்து வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. உடனடியாக அந்த கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்ததோடு மட்டுமின்றி அவர் மீது வழக்கு பதிந்து, போலீசார் கைது செய்து மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற பீடா கடை அதிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: