அர்ஜென்டினா வெற்றி பெற்றதால் 1000 பேருக்கு இலவச பிரியாணி: கேரள ஓட்டல் அதிபர் கலக்கல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கால்பந்து விளையாட்டிற்கு ரசிகர்கள் மிக அதிகம். உலகக்கோப்பை போட்டி தொடங்கிய அன்று முதல் கேரளாவே விழாக்கோலம் பூண்டது. கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டன. திருச்சூரில் ஓட்டல் நடத்தி வரும் ஷிபு என்பவர் அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகர் ஆவார்.

உலகக் கோப்பை போட்டி தொடங்கியவுடன் அவர் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தன்னுடைய அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றால் 1,000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்குவதாக அவர் அறிவித்தார். நேற்று அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்றது. இதையடுத்து ஷிபு கூறியபடி இன்று ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி வழங்கப்பட்டது.

சிறுவன் பலி

உலக கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி பெற்றவுடன் கொல்லத்தில் ரசிகர்கள் வெற்றி ஊர்வலம் நடத்தினார்கள். இதில் அப்பகுதியைச் சேர்ந்த அக்‌ஷய் (17) என்ற பள்ளி மாணவனும் கலந்து கொண்டான். ஊர்வலத்தில் கோஷமிட்டபடி சென்று கொண்டிருந்த போது மாணவன் திடீரென சுருண்டு மயங்கி விழுந்தான். உடனே அவனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Related Stories: