சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து இளைஞர் நலன், விளையட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர்  சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், இத்துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையானது, அரசினால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரை, முதலமைச்சர் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் வெளியிடப்பட்ட இதர அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது அமைச்சர் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலமாக ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் மற்றும் அவற்றின் செயலாக்கத்தினை இத்துறை கண்காணிக்கும் முறை பற்றியும், துறைவாரியாக 2021-22, 2022-23ஆம் ஆண்டுகளில் இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் அமைச்சர் விவரிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் அரசின் முக்கிய திட்டங்களின் செயல்பாட்டினை கண்காணிப்பதற்காக மாநில அளவில் உள்ள மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாகவும், கள அளவில் ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கள ஆய்வு அலுவலர்களாகவும் அரசு நியமித்துள்ளது.

இவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கைகளை இத்துறை உரிய முறையில் தொகுத்து சம்மந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து அதன் அடிப்படையில் திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.

மேலும், இத்துறையினால் முன்னெடுக்கப்பட்ட சில முத்தாய்ப்பான முயற்சிகளான மாவட்டங்களின் வளர்ச்சிக்கான ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான ‘நான் முதல்வன்’ திட்டம், இளம் வல்லுநர்களின் திறன்மிகு ஆற்றலை அரசுத்திட்டங்களில்  பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்’ ஆகியவற்றின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் துறையினால் எடுத்துரைக்கப்பட்டது.

 

அரசு நிர்வாகத்தில் தரவு சார்ந்த  மேலாண்மையின் பயனாக அரசின் திட்டங்கள் தகுதியுள்ள பயானளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் நடைமுறைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஆய்வின்போது, அமைச்சர் மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களின் முன்னேற்றத்தைக் குறித்தும் அத்திட்டங்களினால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள் குறித்தும், இத்திட்டங்களை கண்காணிக்கும் விதம் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

இவைத்தவிர, பல்வேறு துறைகளின் முத்திரை பதிக்கும் திட்டங்கள், தகவல்தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அமைச்சர் , சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அரசின் கண்காணிப்பு அமைப்பாக திறம்பட செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அறிவிப்புகள் ஆணைகளோடு நின்றுவிடாமல் அவை கடைகோடி மக்களையும் சென்றைடையும் வகையில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை இத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், மேலும் முத்திரை பதிக்கும் முத்தாய்ப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இத்துறை இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அரசின் திட்டங்கள் வெற்றியடைய சம்பந்தப்பட்ட துறைகளை இத்துறை சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தகவல்தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு அறிவிக்கும் பலன்கள் சென்று சேர்வதை இத்துறை மேலும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தின்போது அறிவுறுத்தினார். இவ்வாய்வு கூட்டத்தில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், துறையின் அரசு சிறப்புச் செயலாளர் எஸ்.நாகராஜன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னெசன்ட் திவ்யா, மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: