இவ்வழக்கில் போலீசாருக்கு கிடைத்த தடயங்களான கத்தி, டார்ச் லைட், தீப்பெட்டி உள்ளிட்டவற்றை ஆதாரமாக கொண்டு தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு காமிராவில் சிக்கிய தடயங்கள் போலீசாரின் விசாரணைக்கு போதுமானதாக இல்லை. இவ்வழக்கு விசாரணை குறித்து தென்மண்டல ஐஜி கண்ணன் நேற்று கூறுகையில், இன்னமும் ஒரு வாரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கு முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் தனிப்படை போலீசார் இவ்வழக்கிற்காக டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள், பிரேத பரிசோதனை முழுமையான அறிக்கை, தடயவியல் ஆய்வு முடிவுகள் ஆகியவை இப்போதைக்கு அவசியம் தேவை என்கின்றனர். இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கை விசாரிக்கும் தனிப்படை அதிகாரிகள் மற்றும் ேபாலீசாருடன் தென்மண்டல ஐஜி கண்ணன் நேற்று சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும் ஐஜி சார்பில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைகள் குறித்தான சில ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. போலீசார் இதுநாள் வரை அதை மர்ம மரணம் என குறிப்பிட்டே விசாரிக்கும் நிலையில், அது கொலையா என்பதை இன்னும் இரு தினங்களுக்குள் உறுதிப்படுத்திட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முழு விபரங்களுடன் கூடிய போஸ்ட்மார்ட்டம் அறிக்கை மற்றும் ஜெயக்குமார் கடிதங்களில் இடம் பெற்றுள்ள கையெழுத்தை உறுதி செய்வதற்கான அறிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திட ஐஜி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் கரைச்சுத்துப்புதூரில் இருந்து கடைசியாக சென்ற இடங்களில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்பது குறித்து இரு தனிப்படையினர் அந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம கொலை வழக்கு: தனிப்படை அதிகாரிகளுடன் தென்மண்டல ஐஜி ஆலோசனை appeared first on Dinakaran.