முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக அக்கறை காவல் துறையினர் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்; சபாநாயகர் அப்பாவு உறுதி

நாகர்கோவில்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் மீது அதிக அக்கறையுடன் உள்ளார். அவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினர் மீது எப்போதுமே அதிக அக்கறை கொண்டவர்.

காவல்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முதல்வர் ஆர்வமாக உள்ளார். கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை என்னென்ன கோரிக்கைகள் இருக்கின்றன என்பதை எல்லாம் ஆராய்ந்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற முன்னாள் நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ததும், நிச்சயம் காவல்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: