சென்னை: பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுனை இன்னும் பிடிக்க முடியவில்லை என்று எழுத்துபூர்வமாக அறிக்கையை தாக்கல் செய்வதா என்று செஷன்ஸ் நீதிமன்றம் காவல் துறையை கண்டித்துள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், ‘வீடியோ’ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மீரா மிதுன் மற்றும் அவருக்கு உதவிய அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர். அதன் பிறகு மீரா மிதுன் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு முதன்மை அமர்வு நீதிபதி அல்லி ஜாமீன் வெளிவராத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.