நெல்லை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் அளித்த பேட்டி:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டி அரசை நடத்தும் தமிழக கவர்னரை திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 29ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஏஐடியுசி
தொழிற்சங்கம் பங்கேற்கும். தமிழக கவர்னர், பலரை சாகடிக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்திற்கு அனுமதி தர மறுத்து இழுத்தடிக்கிறார்.
இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்கள், பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர். ஆனால் தற்போதைய மோடி அரசு கடந்த 9 ஆண்டு ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தைகூட உருவாக்கவில்லை. மாறாக 23 பொதுத்துறை நிறுவனங்களை மூடி தொழிலாளர் விரோத செயலில் ஈடுபட்டுள்ளார். இதை கண்டித்தும், தமிழகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தியும், மோடியின் தொழிலாளர் விரோத சட்டங்களில் ஒன்றைகூட தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தியும் ஜனவரி 24ம் தேதி ஏஐடியுசி சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் 1 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.