மாடியில் இருந்து தவறி விழுந்த பிளம்பர் பலி: 3 பேர் கைது

அண்ணாநகர்: மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சாகிர் ஆலம் (29). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை முகப்பேரில் வாடகை வீட்டில் தங்கி, பிளம்பிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளில் இவர் பிளம்பிங் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கட்டிடத்தின் 5வது மாடியில் சாகிர் ஆலம் பிளம்பிங் வேலை செய்தபோது தவறி கீழே விழுந்து  படுகாயமடைந்தார். தகவலறிந்து நொளம்பூர் போலீசார் விரைந்து வந்து சாகிர் ஆலமை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இவர் பலியானார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் நிறுவன கட்டுமான நிர்வாகி சக்திவேல் (46), உதவி நிர்வாகி ராம்பிரசாத் (33), சூபர்வைசர் முருகன் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: