நள்ளிரவு 12 மணிக்கு சூர்யாவுக்கு பிரியாணி விருந்து கொடுத்த பிரபாஸ்

ஐதராபாத்: சூர்யாவுக்கு நள்ளிரவு 12 மணிக்கு பிரியாணி விருந்து கொடுத்தார் பிரபாஸ். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெறும் தளத்துக்கு அருகிலேயே பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் நடந்து வந்தது. அப்போது படப்பிடிப்புக்கு இடையே, சூர்யாவை பிரபாஸ் சந்தித்து பேசினார். இருவரும் நீண்ட கால நண்பர்கள். இந்த சந்திப்பின்போது, ஸ்டுடியோவுக்கு அருகில் உள்ள ரெஸ்டாரன்ட்டுக்கு டின்னருக்கு வரும்படி சூர்யாவை பிரபாஸ் அழைத்தார்.

சூர்யாவும் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் மாலை 6 மணிக்கு தொடங்க வேண்டிய படப்பிடிப்பு தாமதமானது. இதையடுத்து தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருந்த சூர்யா, பிரபாசின் டின்னர் விருந்தை மறந்துவிட்டார். இதையடுத்து படப்பிடிப்பு முடிய இரவு 11.30 மணியானது. அப்போதுதான் சூர்யாவுக்கு பிரபாஸ் அழைத்த ரெஸ்டாரன்ட்டுக்கு போக வேண்டும் என்பது தெரிந்தது. உடனே பிரபாசுக்கு போன் செய்து ஸாரி கேட்கலாம் என சூர்யா முடிவு செய்தார். சூர்யா போன் செய்தபோது, ‘ஒன்றும் பிரச்னை இல்லை. உங்களுக்காக காத்திருக்கிறேன். நம்ம வேலையே அப்படித்தானே. நீங்கள் நிதானமாக வாருங்கள்’ என பிரபாஸ் சொன்னதும், சூர்யா நெகிழ்ந்து போனார். உடனே அவர் ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றார்.

அப்போது மணி நள்ளிரவு 12. அங்குள்ள உணவைத்தான் பிரபாஸ் ஆர்டர் கொடுப்பார் என நினைத்திருந்தபோது, தனது அம்மா சமைத்த சுவையான பிரியாணியை கொண்டு வந்து, சூர்யாவுக்கு பரிமாறினார் பிரபாஸ். இது சூர்யாவுக்கு மேலும் சர்ப்பிரைஸாக அமைந்தது. இதுபற்றி சூர்யா கூறும்போது, ‘பிரபாசின் அம்மா சமைத்த பிரியாணி அதிக சுவையுடன் இருந்தது. காரணம், அதில் அம்மாவின் அன்பும் பிரபாசின் அக்கறையும் கலந்திருந்தது’ என்றார்.

Related Stories: