கணவன் மீது பைக் மோதல், தட்டிக்கேட்ட பெண் சரமாரி குத்தி கொலை; லாரி டிரைவர் கைது

சாணார்பட்டி: நடந்து சென்ற கணவன் மீது பைக் மோதியதை தட்டி கேட்ட பெண்ணை சரமாரி குத்தி கொலை செய்த, லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி லட்சுமி (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). லாரி டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் இரவு பைக்கில் வந்தபோது சாலையில் நடந்து சென்ற சக்திவேல் மீது மோதினார். இதனை உடன் இருந்த சக்திவேலின் மனைவி லட்சுமி தட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து சக்திவேலும் அவரது மனைவி லட்சுமியும் வீட்டு வாசலில் நின்றிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சிவக்குமார் மீண்டும் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சிவக்குமார், திருப்புளியால் லட்சுமியை வயிறு மற்றும் கழுத்து பகுதியில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, திண்டுக்கல் குள்ளனம்பட்டி அருகே பர்மா காலனியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சிவக்குமாரை நேற்று கைது செய்தனர். பைக் மோதிய விபத்திற்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: