காதலியை ஆடம்பரமாக வாழவைக்க வீட்டின் பூட்டை உடைத்து 16.5 சவரன் திருடிய வாலிபர்: சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்

அண்ணாநகர்: சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). இவர் கடந்த 14ம் தேதி, தனது வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊரான தென்காசிக்கு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று முன்தினம் அவர்கள்  வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 16.5 சவரன் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் பைக்கில் வந்து திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, மதுரவாயல் வெண்ணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆதித்யா (25) என்பவர் சரவணன் வீட்டிற்கு வந்து சென்றது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், தனது காதலியை ஆடம்பரமாக வாழ வைப்பதற்காக, சரவணன் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 16.5 சவரன் மற்றும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: