அண்ணாநகர்: சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). இவர் கடந்த 14ம் தேதி, தனது வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊரான தென்காசிக்கு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று முன்தினம் அவர்கள் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 16.5 சவரன் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் பைக்கில் வந்து திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.