போதைப்பொருட்கள் விற்ற வழக்கில் தான்சானியா பெண்ணிடம் போலீஸ் காவலில் விசாரணை

சென்னை: போதைப் பொருட்கள் விற்ற வழக்கில், தான்சானியா நாட்டு இளம்பெண்ணை, 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில், 12ம் தேதி போதைப்பொருட்கள் விற்பனை செய்த தான்சானியாவை  சேர்ந்த பிர்ஸ்க்கா அம்சா (28) என்பவரை அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர், பெங்களூரூவில் இருந்து சென்னை வந்து அண்ணாநகர் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இவருக்கு கொகைன் போதைப்பொருளை அளித்தது, பெங்களூரூவை சேர்ந்த மிக் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பிர்ஸ்க்கா அம்சாவை கைது செய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள பிர்ஸ்க்கா அம்சாவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். பிறகு நீதிமன்ற உத்தரவின்படி, பிர்ஸ்க்கா அம்சாவை நேற்று முன்தினம் போலீசார் காவலில் எடுத்தனர். 3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்த பிறகு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் யார் என்பது அடையாளம் தெரியவரும் என்றும், சென்னையில் யாரிடம் போதைப் பொருட்கள் விற்பனை செய்ய வந்தார் என்பது குறித்து  பல தகவல்கள் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: