உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ₹2.70 லட்சம் பறிப்பு: மேலும் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்; காதலி சமூக நிர்வாகி உள்பட 4 பேர் கைது

மயிலாடுதுறை: சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (59). காரைக்காலில் மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். திருநள்ளாறு சாலையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த ஐயப்பன் மனைவி சுபாஷினி (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதமாக காரைக்காலுக்கு சுபாஷினி சென்று வந்தார். அப்போது தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி வெங்கடேசனிடம், சுபாஷினி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி வெங்கடேசனும், சுபாஷினியும் தனிமையில் இருந்தனர். அதை நைசாக செல்போனில் வீடியோ எடுத்தார் சுபாஷினி. இதையடுத்து அவரிடம் பெரிய அளவில் பணம் பறிக்க திட்டமிட்டார். அதன்படி, கடந்த மாதம் 29ம் தேதி மயிலாடுதுறை காவேரி நகரில் உள்ள தனியார் விடுதிக்கு வெங்கடேசனை சுபாஷினி வரவழைத்தார். அப்போது, மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணை செயலாளரான மயிலாடுதுறையை சேர்ந்த கில்லி பிரகாஷ் (40) என்பவருக்கு தகவல் தெரிவித்து சுபாஷினி வரவழைத்தார். அவருடன் கூட்டாளிகளான முகமது நசீர் (39), தினேஷ் பாபு (31) ஆகியோர் வந்தனர். அனைவரும் சேர்ந்து, ‘நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விடு, இல்லாவிட்டால் சுபாஷினியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு விடுவோம்’ என்று வெங்கடேசனை மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.2.70 லட்சத்தை பிரகாஷ், சுபாஷினி பறித்தனர். மேலும் வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து கில்லி பிரகாஷ், சுபாஷினி, முகமது நசீர், தினேஷ்பாபு ஆகியோரை இன்று காலை கைது செய்தனர். அவர்களை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். சுபாஷினியை திருவாரூர் சிறையிலும், மற்ற 3 பேரை மயிலாடுதுறை கிளை சிறையிலும் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011ம் ஆண்டு முதல் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ₹2.70 லட்சம் பறிப்பு: மேலும் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்; காதலி சமூக நிர்வாகி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: