கைதிகள், உறவினர்களிடம் பேச இன்டர்காம் வசதி: கோவை மத்திய சிறையில் அறிமுகம்

கோவை: கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று மொத்தம் 2026 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், விசாரணை கைதிகளின் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பேசவும், குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், தண்டனை கைதிகள் செவ்வாய், வியாழக்கிழமைகளில் பார்த்து பேசவும் அனுமதிக்கப்படுகிறது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு மனு அளித்து அதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் உறவினர்கள் பேச முடியும்.

சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையில் இரண்டு மீட்டர் தூரத்தில் நின்றுதான் பேச முடியும். வழக்கறிஞர்களும் இதே போன்று தான் பேசும் நிலை இருந்தது. மேலும், வயதான கைதிகளிடம் உறவினர்கள் பேசுவதை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. மேலும் வயதான உறவினர்கள், இளம் கைதிகளிடம் பேசும் போதும் புரிந்து கொள்ள முடியாததால், சத்தம் போட்டு பேச வேண்டிய நிலை இருந்தது.

இதற்கு மாற்று ஏற்பாடாக கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் உத்தரவுபடி சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, ஜெயிலர் சிவராஜ், ஆகியோர் மேற்பார்வையில் மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரு பக்கத்திலும் இன்டர்காம் வைத்து கைதிகளும், அவர்களது உறவினர்களும் எளிதில் பேச தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதல் முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 8 இன்டர்காம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: