பெசன்ட் நகரில் பணம் வைத்து சூதாட்டம் நடத்திய 12 பேர் கைது: ரூ.16,700 பறிமுதல்

வேளச்சேரி: சென்னையில் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், பெசன்ட் நகர் முதல் அவென்யூவில் உள்ள பழைய கட்டிடத்தின் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சாஸ்திரி நகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை மடக்கி, பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர்கள் பெசன்ட் நகரை சேர்ந்த கார்த்திக் (38), பிரதாப் (24), மணிகண்டன் (33), சரத் (22), மணிகண்டன் (27), குமார் (63), செல்வம் (55),  கார்த்திக் (26), ராஜேஷ் (38) சக்திவேல் (40), செல்வபாண்டியன் (58), சக்கரவர்த்தி (27) என தெரிய வந்தது.  அவர்களை கைது   செய்த போலீசார், அவர்களிடமிருந்து  சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ. 16,700 மற்றும் 3 சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: