புதுடெல்லி: விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை பாஜ அரசு நிறைவேற்றவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டினார். கடந்த 2020ம் ஆண்டு சர்ச்சைக்குரிய வேளாண் சட்ட மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஓராண்டாக நீடித்த போராட்டத்தின் போது பல்வேறு காரணங்களால் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்தனர். இதையடுத்து, கடந்த நவம்பர் 19ம் தேதி வேளாண் சட்டம் வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்தார்.
வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு, இந்த தினத்தை வெற்றி தினமாக விவசாயிகள் கொண்டாடினர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் பதிவிடுகையில், ‘வாகனத்தின் சக்கரங்களுக்கு அடியில் தள்ளி விவசாயிகளை கொன்ற மோடி அரசு அவர்களுக்கு அளித்த வாக்குறுதியான 50 சதவீத குறைந்தபட்ச ஆதார விலை வழங்கவில்லை. வீர மரணமடைந்த 733 பேருக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. மேலும், விவசாயிகள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறவில்லை,’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.