உத்தரபிரதேச பெண் கான்ஸ்டபிளுடனான கள்ளக்காதல் அம்பலமானதால் போலீஸ் எஸ்ஐ தற்கொலை

கான்பூர்: உத்தரபிரதேச பெண் கான்ஸ்டபிளுடனான கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானதால் ரவுடியை சுட்டுக் கொன்ற பிரபலமான போலீஸ் எஸ்ஐ தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டர் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனூப் சிங் கடந்த 10ம் தேதி விஷம் குடித்தார். தொடர்ந்து, அவர்  ரீஜென்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி இறந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட அனூப் சிங்கின் மனைவி பூனம் சிங் போலீசில் அளித்த புகாரில், ‘எனது கணவர் அனூப் சிங் ஃபசல்கஞ்ச் காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அதே காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவரும் பணியாற்றி வந்தார். எனது கணவருக்கும், அந்த பெண் காவலருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு எனது கணவரிடம் அந்த பெண் காவலர் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக எனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண் கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கான்பூர் போலீஸ் கமிஷனர் பிபி ஜோக்தந்த் கூறுகையில், ‘பெண் கான்ஸ்டபிளுக்கும் தற்கொலை செய்து கொண்ட அனூப் சிங்கிற்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்களை பெண் கான்ஸ்டபிள் வெளியிட்டார். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அனூப் சிங் தற்கொலை செய்து கொண்டார். பெண் ஏசிபி ஒருவர் வழக்கை விசாரித்து வருகிறார். தற்போது அந்த பெண் கான்ஸ்டபிள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறினார்.

Related Stories: