அரியலூர் அடகு கடையில் 209 பவுன் நகைகள் கொள்ளை

ஜெயங்கொண்டம்: அரியலூர் அருகே அடகு கடை சுவரில் துளையிட்டு 209 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பினர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தாலுகா ஸ்ராதானா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (35). குடும்பத்துடன் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்து வருகிறார். மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி கிராமத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி வழக்கம் போல சங்கர், கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் சங்கர் மற்றும் பணியாளர்கள் கடைக்கு வந்தனர்.

கதவை திறந்து பார்த்த போது உள்ளே சுவரில் ஒரு ஆள் செல்லக்கூடிய அளவுக்கு துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நகைகளை சரிபார்த்தபோது, லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 209 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 31.35 லட்சம். கடை பூட்டி கிடந்ததால் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள், சுவரில் துளையிட்டு லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: