திருவனந்தபுரம்: கேரள கவர்னருக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் கவர்னர் மாளிகையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ‘நிதியமைச்சர் பாலகோபால் தேசியத்தை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று முதல்வர் பினராய் விஜயனுக்கு நேற்று முன்தினம் கவர்னர் ஆரிப் முகம்மது கான் கடிதம் அனுப்பினார். கவர்னரின் கோரிக்கையை நிராகரித்த முதல்வர் பினராய் விஜயன் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி பதில் கடிதம் அனுப்பினார்.