சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் பிடிபட்டார்

அம்பத்தூர்: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் கேரள வாலிபரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக அம்பத்தூர் மதுவிலக்கு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் 24ம் தேதி சென்ட்ரல் ரயில்நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும்படி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், அவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை அம்பத்தூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு (31) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட விஷ்ணுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்ட்ரல் ரயில்நிலையத்தில் வாலிபரிடம் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: