சூரிய கிரகணத்தில் சாந்தி அபிேஷகம் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் நடை திறந்திருக்கும்-பண்டிதர்கள் தகவல்

ஸ்ரீகாளஹஸ்தி : நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு சாந்தி அபிஷேகம் நடைபெறும் என்று கோயில் வேத பண்டிதர்கள் தெரிவித்துள்ளனர்.ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சுயம்பு லிங்கம் என்பதால் நாட்டில் மற்ற கோயில்களின் சம்பிரதாய முறைகள் வேறுபட்டு இருக்கும். பஞ்சபூத லிங்கங்களில் வாயு லிங்கேஸ்வரராக ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவதால் இங்கு   மற்ற கோயில்களை போல் இல்லாமல், பூஜை முறைகள் அனைத்தும் வேறுபட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூரிய, சந்திர கிரகணங்கள் சமயத்தில் நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் மூடப்பட்டிருக்கும். ஆனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மட்டும் வழக்கம் போல் திறக்கப்பட்டு கிரகண சமயத்தில் மட்டும் சாந்தி அபிஷேகங்கள் நடப்பது வழக்கம்.  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வழக்கம் போல் திறக்கப்பட்டு,  கிரகண கால அபிஷேகத்தை சாந்தி அபிஷேகங்களாக நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து கோயில் வேத பண்டிதர்கள் கூறுகையில், ‘ 25ம் தேதி சூரிய கிரகணம் நாள் என்பதால் ‘கேதார கவுரி விரதம்’ நடத்த இயலாது. இதனால் அப்பூஜை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்திற்கு பின்னர் கோயிலை சுத்தப்படுத்தி சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.

இந்நிலையில், 25ம் தேதி மாலை 5.11 நிமிடங்களிலிருந்து 6.40 மணி வரை கிரகணம் நிகழவுள்ளது. அச்சமயத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்படும். மேலும் தினமும் 5 கால அபிஷேகம் நடக்கும் நிலையில், 25ம் தேதி மாலை நடக்கும் நான்காம் கால அபிஷேகமானது சாந்தி அபிஷேகமாக மாலை 7 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இதனால் 5ம் கால அபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: