ராணிப்பேட்டை: விவசாய நிலத்தில் பயிற்சி செய்து ஒரே மையத்தில் போலீஸ் பயிற்சி முடித்த 3 சகோதரிகளால், விவசாயியான தந்தை மகிழ்ச்சியடைந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இவர்களது மகள்கள் பிரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி. இதில் மூத்த மகள் பிரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சகோதரிகள் 3 பேரும் காவல்துறையில் சேர வேண்டும் என்று உறுதி மேற்கொண்டு அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு 2ம் நிலை காவலர் தேர்வில் கலந்துகொண்டு தேர்வடைந்தனர். அதனைத்தொடர்ந்து, திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் சகோதரிகள் 3 பேரும் 2ம் நிலை காவலர் பயிற்சியை 2 நாட்களுக்கு முன்பு சிறப்பாக முடித்தனர்.