எண்ணெய் தேய்த்துவிட தனியறைக்கு அழைத்து பெண் தொழிலாளியிடம் சில்மிஷம் பனியன் நிறுவன அதிபர் கைது

திருப்பூர்: திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவர் பனியன் நிறுவன உரிமையாளர். இவரது நிறுவனத்தில் ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். அதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் பழனிச்சாமிக்கு கால்முறிவு ஏற்பட்டது. நேற்று காலை பழனிச்சாமி கம்பெனியில் உள்ள ஒரு அறைக்கு வந்தார். அப்போது 22 வயது இளம்பெண்ணை அழைத்து முறிவு ஏற்பட்ட தனது காலுக்கு எண்ணெய் தேய்த்துவிடும்படி கேட்டார். கம்பெனி உரிமையாளர் என்பதால் இளம்பெண்ணும் இதற்கு சம்மதித்துள்ளார்.

தனி அறையில் இளம்பெண், எண்ணெய் தேய்த்தபோது பழனிச்சாமி திடீரென அத்துமீறி பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சல் போட்டபடி வெளியில் ஓடி வந்தார். சக தொழிலாளர்கள் அவரிடம் விசாரித்தபோது, தன்னிடம் பனியன் அதிபர் நடந்து கொண்டதை கூறி கதறி அழுதார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சில்மிஷத்தில் ஈடுபட்ட பனியன் நிறுவன அதிபர் பழனிச்சாமியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: