முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: பாஜ நகர செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், முன்ஜாமீன் கோரி பாஜ நிர்வாகி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசுவ இந்து பரிசத் அமைப்பின் சார்பில் கடந்த ஜூன் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா அம்பாசமுத்திரம் நகர செயலாளர் ராமச்சந்திரன் (எ) ராஜேந்திரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகவும் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது.

இதன் அடிப்படையில், அம்பாசமுத்திரம் போலீசார், ராமச்சந்தின் மீது அவதூறாக பேசியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். இவ்வழக்கில் முன் ஜாமீன்கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் ராமச்சந்திரன் மனு செய்தார். இம்மனு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வக்கீல் முத்துமாணிக்கம் ஆஜராகி, ‘மனுதாரர் வேண்டுமென்று அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: