பெங்களூரு: பெங்களூருவில் ‘இட்லி ஏடிஎம்’ மூலம் 24 மணி நேரமும் இட்லிகளை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பஞ்சு போன்ற இட்லியை சாம்பார், சட்னியில் குழைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி. இப்போது, ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி, தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை பெங்களூருவில் நிறுவியுள்ளது. இது தொடர்பான வீடியோ டிவிட்டரில் வெளியாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர்களான ஷரன் ஹிரேமத், சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரால் நிறுவப்பட்ட ப்ரெஷப் ரோபோட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இது, 12 நிமிடங்களில் 72 இட்லிகளை சுட்டு தரும். இயந்திரத்தில் இட்லிக்கு தேவையான பொடி, சட்னிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.