பெங்களூரு: கோயிலுக்கு எதிரில் மதுபானக் கடை செட் போட்டதால் நாக சைதன்யா படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி, பிரியாமணி, பிரேம்ஜி நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இந்த படம் தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகிறது. இந்த படத்துக்காக கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மேலுகோட் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலுக்கு அருகில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கோயிலுக்கு எதிரில் படக்குழுவினர் மதுக்கடை செட் ஒன்றை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கோயிலுக்கு அருகில் விதிகளை மீறி செட் அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.