சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த ஊட்டி: 6 நாட்களில் 80 ஆயிரம் பேர் வருகை

ஊட்டி: ஆயுத பூஜை விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறையை கொண்டாட பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டுள்ள நிலையில் கடந்த 6 நாட்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டி வந்துள்ளனர். சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு  நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரசு விடுமுறை, பள்ளி தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டியை விடுமுறை அளிக்கிப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 3, 4 ஆகிய இரு நாட்கள் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் சாதாரண நாட்களை விட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மட்டுமின்றி உள்ளூர் மக்கள் கூட்டமும் சற்று அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன. அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவை மற்றும் வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதேபோல், சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்து நின்று கோவை மற்றும் வெளியூர்களுக்கு சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள முக்கிய கடை வீதிகள் மற்றும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சாலை மற்றும் பூங்கா சாலைகளில் சுற்றுலா பயணிகள் வாகனத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டாவது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, அரசு தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சியை போன்று 15 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக கடந்த 1ம் தேதி முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக, நேற்று முன்தினம் வரை விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்துள்ளனர். நேற்றும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பள்ளிகளுக்கு வரும் 8ம் தேதி வரை விடுமுறை என்பதால், அன்றைய தினம் வரை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வருகையில் ஊட்டியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் சீசனில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: