அண்ணாநகர்: முகப்பேர் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக கோணி பையுடன் வந்த நபர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஏராளமான இரும்பு குழாய்கள் இருந்தன. இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், அவர் முகப்பேர், பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த ரவுடி ராஜேஷ் (28) என்பதும், இவர் மீது ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பல்வேறு இடங்களில் இரும்பு குழாய்களை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தில் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து பள்ளிவாசலில் திருடிய ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு குழாய்களை பறிமுதல் செய்தனர். பின்னர், ராஜேஷை கைது செய்தனர்.