சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் வீட்டில் பதுக்கி கஞ்சா விற்பனை செய்து வந்த வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி மக்கான் தெருவை சேர்ந்தவர் வினோத் (25). இவர் ஆந்திராவில் இருந்து உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்து ரகசியமாக விற்பனை செய்வதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் தலைமையிலான தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வினோத் வீட்டில் தனிப்படை உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, 1.250 கிலோ கிராம் உயர் ரக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியந்தது. உடனே தனிப்படை போலீசார் வினோத்தை பிடித்து ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவனிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஐஸ்அவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா விற்பனை செய்து வந்த வினோத்தை கைது செய்தனர். அதேபோல், லாயிட்ஸ் காலனி விநாயகர் கோயில் பின்பிறம் கஞ்சா விற்பனை செய்ததாக ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 1வது தெருவை சேர்ந்த அன்பரசு (24) என்பவரை ஐஸ்அவுஸ் போலீசார் கைது செய்தனர்.