பாதி அளவுக்கு சேறும், சகதியுமாக உள்ள குந்தா, கெத்தை அணைகள் தூர்வாரப்படுமா?

மஞ்சூர்:  குந்தா, கெத்தை அணைகளில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்ற அணைகளை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி  மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர்  மின்நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு,  கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி  வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின்நிலையங்களில் மொத்தம் 833.65 மெகாவாட்  மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் குந்தா நீர் மின்  திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின்சார  நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர் மின்சார உற்பத்திக்குபின் அவலாஞ்சி  மற்றும் எமரால்டு அனைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் ராட்சத  குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு  60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  

இதை தொடர்ந்து  வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில்  அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு  செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கெத்தை மின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும்  நீர் மீண்டும் சுரங்கபாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு  செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குந்தா, கெத்தை மற்றும் பரளி மின்  நிலையங்களின் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா மற்றும்  கெத்தை அணைகளை தூர் வாராததால் பெருமளவு சேறு, சகதிகள் தேங்கியுள்ளது.  பருவ மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோரங்களில் உள்ள விவசாய  நிலங்கள் மற்றும் செடி, கொடிகள் மரங்கள் அடித்து செல்லப்பட்டு அணைகளில்  கலக்கிறது.

இதனால் குந்தா மற்றும் கெத்தை அணைகளில் 50 சதவீதத்திற்கும் மேல்  சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளது. இதனால் குறைந்தபட்ச மழை  பெய்தாலே அணைகள் நிரம்பி விடுகிறது. சேறு, சகதிகளால் குந்தா அணையில்  அமைந்துள்ள சுரங்க பாதையில் அடைப்பு ஏற்பட்டு கெத்தை மின்நிலையத்தில்  உற்பத்தி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படுகிறது. கடந்த மாதம் தொடர்ந்து  பெய்த கன மழையில் குந்தா மற்றும் அவலாஞ்சி அணைகள் நிரம்பியதை தொடர்ந்து  அணைகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும்  காலங்களில் குந்தா மற்றும் கெத்தை அணைகளில் முழுமையாக நீரை சேமித்து  வைக்கவும் தடையின்றி மின்சார உற்பத்தி மேற்கொள்ளும் வகையில் அணைகளை  உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் உள்பட  பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளார்கள்.

Related Stories: