பிரதமர் மோடி பெயர் சூட்டிய பெண் சிவிங்கிப்புலி கர்ப்பம்? 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல் குட்டி

போபால்: பிரதமர் மோடி பெயர் சூட்டிய பெண் சிவிங்கிப் புலி ஆஷா கர்ப்பமாக இருப்பதற்கான அடையாளங்கள் தென்படுவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன் சிவிங்கிப் புலி விலங்குகள் இனம் அழிந்து போயின. அவற்றை மீண்டும் கொண்டுவரும் நடவடிக்கையாக ஆப்ரிக்காவிலிருந்து 5 பெண் மற்றும் 3 பெண் சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டன. அவற்றை மத்தியப்பிரதேச மாநிலம் சியோபூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் மோடி கூண்டிலிருந்து விடுவித்தார். இவற்றில் பெண் சிவிங்கி புலி ஒன்றுக்கு ‘ஆஷா’ என பெயர் சூட்டிய பிரதமர் மோடி, மற்ற சிவிங்கிப் புலிகளுக்கும் இந்திய பெயர்களை பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், மோடி பெயர் சூட்டிய ஆஷா கர்ப்பமாக இருப்பதாக குனோ உயிரியில் பூங்கா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

அதன் செயல்பாடுகள், பழக்கவழக்கம், ஹார்மோன்கள் ஆகியவை கர்ப்பமாக இருப்பதாக அறிகுறிகளை காட்டுவதாகவும், இதை இம்மாத இறுதியில்தான் உறுதிபடுத்த முடியும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இது குறித்து சிவிங்கிப் புலிகள் பாதுகாப்பு நிதியத்தின் இயக்குநர் ஜெனரல் லவுரி மார்க்கர் அளித்த பேட்டியில், ‘‘ஆஷா கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் முதல் சிவிங்கிப் புலி குட்டியை அது பிரசவிக்கும். நமீபியாவிலிருந்து கொண்டு வரும் போதே இந்த சிவிங்கிப் புலி கர்ப்பமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. தற்போது அந்த சிவிங்கி தனியாக வைக்கப்பட்டுள்ளது. அதன் இருப்பிடத்தில் சிறிய குடிசை அமைக்கப்படும்’’ என்றார். ஆஷா கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அது நமீபியாவிடமிருந்து நமக்கு கிடைத்த இன்னொரு பரிசு எனவும் அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories: