சினிமா இயக்குநர் பெயரில் மாடலிங் பெண்களை ஏமாற்றிய தமிழக வாலிபர் சிக்கினார்

சென்னை: சினிமா இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மாடலிங் பெண்களை ஏமாற்றிய தமிழக வாலிபரை மும்பை போலீசார் கைது செய்தனர். மும்பையில் வசிப்பவர் சினிமா இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். இவரது பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். பதல்பூர், அந்தாத்ஹன் உட்பட பல இந்திப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவர், ஸ்ரீராம் ராகவன் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு துவக்கியுள்ளார். அதன்மூலம், தன்னை தொடர்பு கொள்ளும் பெண்களுக்கு, வெப் சீரியல்களில் வாய்ப்பு வாங்கித்தருவதாக உறுதி அளித்துள்ளார்.

பின்னர், இதற்காக போட்டோ ஷூட், ஆடிஷன் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என கூறி வரவழைத்துள்ளார். வெப் சீரியலில் நிர்வாணமாக நடிக்க வேண்டி வரும் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்த புகார்களின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சைபர் போலீஸ் உதவியுடன் ஆய்வு செய்ததில், தமிழகத்தில் இருந்து மேற்கண்ட இன்ஸ்டாகிராம் கணக்கு துவக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து தமிழகம் வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

நிர்வாணமாக நடிக்க வேண்டும் என போட்டோ ஷூட் நடத்தியதால், மாடலிங் பெண்களை வைத்து நிர்வாண படம் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எத்தனை பெண்களை ஏமாற்றினார், பாலியல் ரீதியாக துன்புறுத்தினாரா என விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: