சில்லி பாயின்ட்...

* கோலாலம்பூரில் நடைபெற உள்ள உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் (அக். 4-8) விளையாட, இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சவுரவ் கோத்தாரி, துருவ் சித்வலா ஆகியோருக்கு நேரடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில், தேசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் வாள்வீச்சில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தமிழக வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார்.

* செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் லேவர் கோப்பை தொடரில் ஐரோப்பிய அணிக்காக விளையாடினார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவரால் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. இது குறித்து கூறுகையில், ‘தற்போது மணிக்கட்டு பகுதியில் சிறு பிரச்னை உள்ளது. அதனால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் சிரமப்பட்டேன். சில தொடர்களில் விளையாடாமல் இருந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம். விரைவில் முழு உடல்தகுதி பெற முடியும் என நம்புகிறேன். ஆண்டு இறுதி ஏடிபி பைனல்ஸ் தொடரில் களமிறங்குவதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றார்.

* அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட், ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் நட்சத்திர வீரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் வாஹ் தெரிவித்துள்ளனர். இந்திய அணியுடன் நடந்த தொடரில், முதல் 2 போட்டிகளில் 18 ரன் மற்றும் 2 ரன் மட்டுமே எடுத்த டேவிட், 3வது டி20ல் அதிரடியாக விளையாடி 27 பந்தில் 54 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: