தூத்துக்குடி: தூத்துக்குடி பாஜ நிர்வாகியின் ஆம்னி பஸ் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியை சேர்ந்தஆம்னி பஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ், பாஜ மாநில ஓபிசி அணி துணை தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இவரது நிறுவனத்தின் கோவை செல்லும் ஆம்னி பஸ், பயணிகளை ஏற்றுவதற்காக தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திற்கும், 3ம் கேட் மேம்பாலத்திற்கும் இடையே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ஒரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், பைக்கை மேம்பாலத்தில் நிறுத்தி, அதிலிருந்தவாறே பஸ்சின் மீது மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி விட்டு தப்பினர். பஸ்சின் அருகே சாலையில் விழுந்து இந்த குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வீச்சால் பஸ்சுக்கோ, பயணிகளுக்கோ பாதிப்பு இல்லை. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.