மதுரை விடுதியில் உடன் தங்கியிருக்கும் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து டாக்டருக்கு அனுப்பிய மாணவி: இருவரும் கைது; 100க்கும் மேற்பட்ட போட்டோ, வீடியோக்கள் சிக்கின

மதுரை: மதுரை பெண்கள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், இளம்பெண்கள் குளிப்பது, உடைமாற்றுவதை சக மாணவியே போட்டோ மற்றும் வீடியோ எடுத்து அனுப்பிய விவகாரத்தில் கமுதி டாக்டர், மாணவியை போலீசார் கைது செய்தனர். இவர்களது செல்போன்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்கள் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி (24). இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். இவர், விடுதியில் உள்ள சக மாணவிகள், இளம்பெண்களை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் வெளியில் அனுப்புவதாக விடுதி காப்பாளர் ஜனனிக்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர் மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

முதலில், காப்பாளர் ஜனனியிடம் விசாரணை நடத்தினர். அதில், ‘‘விடுதியில் தங்கியுள்ள காளீஸ்வரியின் செல்போனில் ஆபாச படங்கள் உள்ளதாக எனக்கு தகவல் வந்தது. நான் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், இளம்பெண்கள் உடை மாற்றுவது, பனியன் - நைட்டியுடன் இருப்பது, குளிப்பது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது’’ என்றார். இதையடுத்து, காளீஸ்வரியை விசாரித்தபோது, ‘‘போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை செல்போன் மூலமாக பொழுதுபோக்கிற்காக எடுப்பது வழக்கம். பெண்கள் தூங்குவது போன்றும் யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்தேன். ஆனால், குளிப்பது போன்று அந்தரங்க வீடியோ எடுக்கவில்லை’’ என்றார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தனர்.

அதிலிருந்து ராமநாதபுரம், கமுதியைச் சேர்ந்த டாக்டர் ஆஷிக் என்பவருக்கு ஆபாச படம் மற்றும் வீடியோக்களை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காளீஸ்வரி மற்றும் டாக்டர் ஆஷிக்கை கைது செய்தனர். டாக்டர் ஆஷிக் கூறும்போது ‘‘காளீஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டது. மதுரையில் விடுதியில் தங்கி படிக்கிறேன் என கூறினார். அப்போது, போட்டோ மற்றும் வீடியோக்களை வைத்து  பெண்களின் உடலியல் மற்றும் மனோபாவங்களை ஆய்வு செய்கிறேன். இதற்காக,  பெண்கள் இயல்பாக நடந்து கொள்ளும் படம் மற்றும் வீடியோக்கள் தேவைப்பட்டது. இதுதொடர்பாக காளீஸ்வரியிடம் பேசி விடுதியில் உள்ள பெண்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அனுப்புமாறு கேட்டேன்.

இதற்கு அவர் ஒப்புக்கொண்டார். கடந்த 3 மாதங்களாக போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து அனுப்பி வைத்தார். அதன் மூலம் ஆய்வு செய்தேன். இதனை சமூக வலைத்தளங்களில் பரப்பவில்லை’’ என்றார். இதற்கிடையே, காளீஸ்வரி மற்றும் டாக்டரின் செல்போன்களை ஆய்வு செய்தபோது, இருவரின் செல்போன்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்கள் இருந்தன. இதில் சில அழிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: