சென்னை: கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து, கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் நைஜீரியாவிலிருந்து வந்த பயணியின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் (46) என்பதும், வரதட்சணை கொடுமை வழக்கில், 15 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், ராமலிங்கத்தை வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். விசாரணையில், ராமலிங்கம் மீது 2007ம் ஆண்டில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதும், ராமலிங்கத்தை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக மகளிர் போலீசார் தேடியபோது, அவர் வெளிநாட்டுக்கு தப்பியதும் தெரிந்தது.