கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு; பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: 70க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் முறையீடு

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஐகோர்ட் தாமாக முன்வந்து ரத்து செய்ய வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு, ஆகஸ்ட் 26ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் தலைமையில் 70க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், ‘‘வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கதல்ல. மேலும் மாணவி தற்கொலைதான் செய்து கொண்டார் என்று நீதிபதி தனது விரிவான உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டில் சட்ட விதிகளை மீறிய செயலாகவே உள்ளது. சுப்ரீம் கோர்ட், கடந்த 2000ம் ஆண்டு மேலவளவு வழக்கில் இதேபோன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வு விசாரித்ததாக மேற்கோள் காட்டியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சடப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை ரத்து செய்ய ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பாக, பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையிட்டார். வேறொரு நாளில் முறையிடுமாறு அவரை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: