ஆசிய கோப்பை பைனலில் இன்று இலங்கை-பாகிஸ்தான் மோதல்: டாஸ் வெல்லும் அணிக்கு அதிக வாய்ப்பு

துபாய்: 15வது ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை பலப்பரீட்சை நடத்துகின்றன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் சூப்பர் பார்மில் உள்ளார். பஹர் ஜமான், இப்திகர் அகமது ஆகியோரும் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் ஷதாப் கான், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் ஆகியோருடன் முகமது நவாஸ் ஆல்ரவுண்டராக மிரட்டுகிறார்.

மறுபுறம் ஷனகா தலைமையிலான இலங்கை, லீக் சுற்றில் தட்டுதடுமாறி வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த நிலையில், ஆப்கன், இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பேட்டிங்கில் பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், பானுகா ராஜபக்சே, ஷனகாவும், பந்து வீச்சில் ஹசரங்கா, தில்ஷன் மதுஷனகா, தீக்‌ஷனா, சமிகா கருணாரத்னே அசத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய உற்சாகத்தில் இலங்கை களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை டி.20 போட்டிகளில் 22 முறை மோதி உள்ளன. இதில் பாகிஸ்தான் 13, இலங்கை 9 போட்டிகளில் வென்றுள்ளன. துபாய் பிட்ச்சில் சேசிங் செய்த அணிகளை அதிகம் வெற்றிகளை குவிப்பதால் டாஸ் செல்லும் அணிக்காக அதிக வாய்ப்பு உள்ளது.

Related Stories: