சென்னை: லண்டனில் நிறுவப்பட்ட பென்னி குக் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள், இங்கிலாந்து மகாராணி மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: இங்கிலாந்து நாட்டில் கேம்பர்ளி நகரில், முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தென்தமிழ் நாட்டின் நீர் வளத்திற்கு வித்திட்ட கர்னல் ஜான் பென்னி குக் திருவுருவச் சிலை நிறுவப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து நேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சிலையை திறந்து வைப்பதற்காக விரிவான ஏற்பாடுகளுடன் திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.