துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இப்போட்டி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லியின் 100வது சர்வதேச டி20 ஆக அமைந்தது. டெஸ்ட் (102), ஒருநாள் (262) மற்றும் டி20 (100) என மூன்று வகை கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர், உலக அளவில் 2வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. முன்னதாக, நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா அறிமுகமானார். முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆஸம் இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். பாபர் 10 ரன் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் அர்ஷ்தீப் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பகார் ஸமான் 10 ரன் எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.