பேராவூரணி: பேராவூரணியில் நடந்த மொய்விருந்தில் ரூ.10 கோடி வசூலானது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரிடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொய் என்ற பழக்கம் இன்று சாதி, மத சமய எல்லைகளை கடந்து அனைவருக்கும் பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி தொகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் நெடுவாசல், அனவயல், வடகாடு உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகமாக மொய் விருந்து நடைபெறுகிறது. ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெற்ற மொய்விருந்து கொரோனாவிற்கு பிறகு எல்லா மாதங்களிலும் பரவலாக நடைபெறுகிறது. ஆரம்ப காலங்களில் காதணி, திருமண விழாக்களில் மட்டுமே வாங்கப்பட்ட மொய், சிறிது காலத்திற்கு பின் மொய் விருந்து விழா என்றே அழைப்பிதழ் அச்சிடப்பட்டு மொய் வாங்கப்படுகிறது.