குடியாத்தம் கூட்டுறவு வங்கி கிளையில் ரூ.97 லட்சம் மோசடியில் கைதான பெண் மேலாளர் பணி நீக்கம்

வேலூர்: வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், புதிய தொழில் தொடங்குவதற்கான கடன்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-19ல் இந்த வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய கடன்களில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது. அதன்பேரில் கூட்டுறவு சங்க தணிக்கை அதிகாரிகள் குடியாத்தம் வங்கி கிளையில் ஆய்வு செய்தனர்.

இதில் 2018-19ம் நிதியாண்டில் மகளிர் சுய உதவிகுழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, ரூ.97 லட்சம் கடன் மோசடியில், கிளை மேலாளர் உமா மகேஸ்வரி ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, அளித்த புகாரின்பேரில், வேலூர் வணிக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து உமாமகேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் உமாமகேஸ்வரி சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். துறை ரீதியான விசாரணை முடிந்ததையடுத்து, உமாமகேஸ்வரியை பணி நீக்கம் செய்து வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு பொது மேலாளர் நேற்று முன்தினம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: