வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை கொன்று பலாத்காரம்: தொடர் கொலைகள் செய்த சைக்கோ சிக்கினார்

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியாக உள்ள பெண்களை குறி வைத்து கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்து வருவது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதில் கொலைக்காரன் யார் என்று தெரியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து விசாகப்பட்டினம் காவல் ஆணையர் காந்த் நிருபர்களிடம் கூறியதாவது:ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்த சந்தக ராம்பாபு, தனது 18 வயதில் ராஜமுந்திரியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கொத்தனாராகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் பணிபுரிந்த நிலையில் பின்னர் ஐதராபாத்தில் குடியேறி ரியல் எஸ்டேட் ஏஜென்டாகவும் பணியாற்றி வந்தார்.

ஐதராபாத்தில் குடியிருந்தபோது அந்த வீட்டின் உரிமையாளருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரை 2018ம் ஆண்டில் ராம்பாபு பிரிந்தார். இந்நிலையில்,  பணிபுரிந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் உரிமையாளரால் ராம்பாபு ஏமாற்றப்பட்டதாக தெரிகிறது. பின்னர் தங்குவதற்கு இடமின்றி விசாகப்பட்டினத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருமண மண்டபம் அருகில் ராம்பாபு தங்கி இருந்தான். தற்போது 49 வயதாகும் ராம்பாபு, மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால்தான், தன் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டது என்று நினைத்து, ராம்பாபு சைக்கோவாக மாற தொடங்கி, பெண்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டார்.

இதுவே தொடர் கொலைகளுக்கு காரணமாக அமைந்தது. இதற்காக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்வது, பின்னர் அவர்களை பலாத்காரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் வயதான தம்பதியை கொலை செய்த பின்னர், கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்களுக்கு வாட்ச்மேன்களாக பணியாற்றிய மூன்று பேரின் குடும்ப பெண்களையும் அடுத்தடுத்து கொலை செய்துள்ளார். இந்தக் கொலைகளுக்கெல்லாம் இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி வந்துள்ளார். வயதான பெண்களையும் கொன்று பலாத்காரம் ெசய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  

ராம்பாபு செல்போன் பயன்படுத்தாததால் ராம்பாபுவை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக இருந்து வந்தது. இந்தநிலையில் போலீசார் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ராம்பாபுவை பிடித்து விசாரித்தபோதுதான், அவனுடைய மனைவி ஏமாற்றியதால் பெண்கள் மீது ஏற்பட்ட கோபமே தொடர் கொலை செய்து பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் தெரிய வரும்.  இவ்வாறு  விசாகப்பட்டினம் காவல் ஆணையர் காந்த் கூறினார்.

Related Stories: