ஆட்டோ டிரைவர் ராஜா கொலையில் திடீர் திருப்பம் எங்கள் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்ததால் வெட்டி கொன்றோம்: கைது செய்யப்பட்ட 13 பேர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ரவுடி வினோத்துக்கு பதிலாக எங்கள் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்ததால் ஆட்டோ டிரைவர் ராஜாவை, நாங்கள் வெட்டி கொன்றதாக கைதான 13 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் ராஜா(49). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இதுதவிர வீட்டின் அருகே கடந்த 4 மாதங்களாக டிபன் கடை நடத்தி வந்தார். டிபன் கடையை அவரது மனைவி பார்த்து வருகிறார்.

திருவல்லிக்கேணி மாட்டங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான வினோத் மற்றும் பாலாஜி ஆகியோரின் தாய் மாமன் ஆவார். ராஜா மீது ராயப்பேட்டை, ஜாம்பஜார் காவல் நிலையங்களில் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேநேரம், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் ரவுடிகள் வினோத் மற்றும் பாலாஜி சிறைக்கு சென்றால் ராஜா தான் ஜாமீனில் இருவரையும் எடுப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 2.50 மணி அளவில் திருவல்லிக்கேணி விக்டோரிய மருத்துவமனை அருகே உள்ள பாரதி சாலையில் ராஜா நின்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் முகக்கவசம் அணிந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று ராஜாவை கத்தி மற்றும் அரிவாளால் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து ஜாம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி செட்டி சேகரின் மகன்களான சூர்யா, தேவா ஆகியோர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜாவை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

உடனே போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் ராஜாவை கொலை செய்த சூர்யா, தேவா மற்றும் அவர்களின் நண்பர்களான வைத்தியநாதன், விக்னேஷ், பாண்டியன் என 13 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உட்பட 7 அரிவாளர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது ெசய்யப்பட்ட ரவுடி சூர்யா, தேவா உட்பட 13 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட ராஜாவின் சகோதரி மகன் வினோத் திருவல்லிக்கேணியில் பிரபல ரவுடியாக உள்ளார். இதனால் மெரினா மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா விற்பனையை செய்து வருகின்றனர்.

அதேநேரம், கைது செய்யப்பட்ட சூர்யா மற்றும் அவரது சகோதரன் தேவா ஆகியோரும் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இரண்டு குழுக்களும் தங்களது ஏரியாக்களை பிரித்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் கஞ்சா வழக்கில் சில நாட்களுக்கு முன்பு ரவுடி வினோத்தை போலீசார் கைது செய்தனர். இதனால் வினோத் பார்த்து வந்த கஞ்சா விற்பனையை அவரது தாய் மாமனான ஆட்டோ டிரைவர் ராஜா கவனித்து வருகிறார். ராஜாவும் ஒரு நேரத்தில் ரவுடியாக இருந்ததால் தனது சகோதரி மகன் நடத்திய கஞ்சா வியாபாரத்தை ராஜா நடத்தி வந்தார்.

ஆனால் வினோத் சிறைக்கு சென்றதால், வினோத் கஞ்சா விற்பனை செய்யும் பகுதியில் சூர்யா மற்றும் தேவா ஆட்கள் கஞ்சா விற்பனை செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, எனது மருமகன் பகுதியில் நீங்கள் கஞ்சா விற்பனை செய்ய கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் ராஜாவுக்கும் ரவுடி சூர்யா தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த 15ம் தேதி இரவு வினோத்துக்கு பதில் ராஜா விக்டோரியா மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கும் ராஜாவுக்கும் நேரடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் தான் ராஜா சூர்யாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் சூர்யா தன்னை படுகொலை செய்வதற்குன் ராஜாவை தனது சகோதரன் தேவா மற்றும் அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து ராஜாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: