மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,000 கனஅடியாக சரிவு: 16 கண் மதகுகள் வழியே வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தம்..!!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர் மழை மற்றும் கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 16ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை தொட்டது.

அணை நிரம்பிய பிறகும் நீர்வரத்து தொடர்ந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி வெள்ளநீர் உபரிநீர் கால்வாயான 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்தது. இதனால் உபரிநீர் போக்கியில் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

உபரி நீர் போக்கியான 16 கண் பாலத்தின் மதகுகள் இன்று காலை மூடப்பட்டன. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 50 ஆயிரமாக இருந்த நீர்வரத்து நேற்றிரவு 20 ஆயிரமாக குறைந்தது. இன்று காலை நீர்வரத்து 16 ஆயிரமாக மேலும் குறைந்துள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.

Related Stories: