நாளை உற்சாக பொங்கல் பண்டிகை செங்கரும்புகள் கட்டு ரூ.400க்கு விற்பனை

சிவகங்கை : பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கட்டு கரும்பு ரூ.400 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தோன்றிய இப்பண்டிகையில் கரும்பு, மஞ்சள் கொத்து, பச்சரிசி, பாசிப்பருப்பு, சர்க்கரை வள்ளி கிழங்கு என விவசாயம் சாந்த பொருட்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யும் வகையில், சிவகங்கை அருகே சாலூர், மலம்பட்டி, சிவல்பட்டி, சானிப்பட்டி, பெருமாள்பட்டி, மீனாட்சிபுரம், வலைராதினிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கரும்புகள், மஞ்சள் கொத்து விளைவிக்கப்படுகிறது.

பல்வேறு வகையான வெள்ளம் தயாரிப்பது, பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட தேவைகளுக்கே செங்கரும்புகள் பயன்படும்.தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன், அடுத்த பொங்கலுக்கான கரும்பு நடவு தொடங்கி விடுகிறது. பத்து மாதங்களில் முழுமையாக வளர்ந்து கரும்புகள் அறுவடைக்கு தயாராகின்றன.

தற்போது அரசு சார்பில் செங்கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு ரேசன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இதனால் செங்கரும்பு விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இது போல் பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானைகளில் கட்டப்படும் மஞ்சள் கொத்துகளும் இப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் கரும்பு, மஞ்சள் கொத்து, தோரணங்கள் கட்ட பயன்படுத்தப்படும் மாவிலை, ஆவரம்பூ, அருகம்புல் உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நாளை வீட்டுப் பொங்கல், நாளை மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி நேற்று முதல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் சந்தைகள், மக்கள் கூடும் இடங்களில் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மாவட்டத்தில் சிவகங்கை தாலுகாவில் உள்ள இப்பகுதியில் உள்ள கிராமங்களில் மட்டுமே செங்கரும்பு விளைவிக்கப்படுகிறது. பிற பகுதிகளில் ஆலைக்கரும்புகளே பயிரிடுகின்றனர். உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளதால் கூடுதல் விலைக்கு விற்றால் மட்டுமே கட்டுபடியாகும். குறிப்பிட்ட அளவிலான கரும்புகளை அரசு கொள்முதல் செய்தது. மற்றவற்றை வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம் என்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஒரு வண்டி கரும்பு (300கரும்புகள்) ரூ.6 ஆயிரத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை கொடுத்து வாங்கி வாகன செலவு உள்ளிட்ட மற்ற அனைத்து செலவுகளையும் சேர்த்து ரூ.8 ஆயிரத்திற்கு விற்றால் மட்டுமே கட்டுபடியாகும்.

இதனால் ஒரு கட்டு கரும்பு ரூ.400 வரை விலை வைத்து விற்பனை செய்கிறோம். ஆனால் தற்போது கட்டாக கரும்பு வாங்குவது குறைந்து விட்டது. ஒன்றிரண்டு கரும்புகள் மட்டுமே கேட்கின்றனர். இரண்டு நாட்களில் விற்பனையாகாத கரும்புகளை குறைந்த விலைக்கே விற்க வேண்டிய நிலை வரும் என்றனர்.

Related Stories: