திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினமான நேற்று முன்தினம் ஆகிய 3 நாட்கள் அதிகளவு பக்தர்கள் திரண்டனர். இதனால், காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 40 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் 87 ஆயிரத்து 692 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 832 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் ரூ.5.30 கோடியை பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். இதற்கிடையே, 3 நாள் விடுமுறை முடிந்து நேற்று பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட்டது. இதனால், பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 அறைகள் நிரம்பி உள்ளது. பக்தர்கள் 10 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.