சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் மோடி

புதுடெல்லி: நாட்டின் 76வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாட உள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை கோலாகலமாக கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு அமிர்த பெருவிழாவாக ஓராண்டுக்கு கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடை வதையொட்டி, பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, நாடெங்கிலும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி, 75ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.  

இந்நிலையில், நாட்டின் 76வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். செங்கோட்டையில் தொடர்ச்சியாக 9வது முறையாக பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக, சுதந்திர தின விழா கொண்டாட்டம் களை இழந்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்த விட்டதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தின விழாவில் பங்கேற்க 7,000 பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி, செங்கோட்டையில் உச்ச கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 1000 கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காட்டும், முக அடையாள கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செங்கோட்டையை சுற்றிலும் டிரோன்கள், பட்டம், கருப்பு பலூன், சீன லாந்தர் விளக்குகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டங்களை பிடிக்க 400 போலீசார் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஓட்டல்கள், ஓய்வு விடுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தின உரையிலும் முக்கிய அறிவிப்பு வெளியிடுவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில், இன்றும் பிரதமர் மோடி தனது உரையில் சுகாதாரம் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக தெரிகிறது. இந்தியாவில் மருத்துவ சேவைக்காக பல நாடுகளில் இருந்தும் பலர் வருகின்றனர். அவர்களுக்காக ‘இந்தியாவில் குணமடையுங்கள், இந்தியாவால் குணமடையுங்கள்’ எனும் மருத்துவ சுற்றுலா திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, 12 மாநிலங்களில் 37 மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தி நவீன மருத்துவ வசதிகள் செய்யப்படும். இதோடு, தேசிய சுகாதார திட்டத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான புதிய தடுப்பூசி சேர்க்கப்படுவது பற்றியும் மோடி அறிவிப்பார் என கருதப்படுகிறது.

சீர்குலைக்க சதி

பஞ்சாப் மாநிலத்தில், சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் துப்பாக்கி, வெடிகுண்டுடன் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 3 கையெறி குண்டுகள், 1 ஐஇடி வகை வெடிகுண்டு, 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: